மும்பையைச் சேர்ந்த சமூக சேவகரும், ஆசிரியையுமான ரூபிள் நாகி (Rouble Nagi), கற்பித்தல் துறையில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக 2026ஆம் ஆண்டிற்கான 'சர்வதேச ஆசிரியர் பரிசை' (Global Teacher Prize) வென்று சாதனை படைத்துள்ளார். துபாயில் சர்வதேச நிகழ்வில் இவர் கெளரவிக்கப்பட்டார்.
இந்த ஆண்டிற்கான சர்வதேச ஆசிரியர் விருதுக்கான போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 139 நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட சிறந்த ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். பல்வேறு கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு, இவர்களிலிருந்து இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த ரூபிள் நாகி முதலிடம் பிடித்து இந்த உயரிய விருதை வென்றுள்ளார்.
மும்பையை மையமாகக் கொண்டு செயல்படும் ரூபிள் நாகி, அடிப்படையில் ஒரு கலைஞர் மற்றும் சமூக சேவகர். இவர் 'ரூபிள் நாகி கலை அறக்கட்டளை' (Rouble Nagi Art Foundation) மூலம், குறிப்பாக குடிசைப்பகுதிகளில் வாழும் ஏழை எளிய குழந்தைகளின் கல்வி மற்றும் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
வறுமை காரணமாக கல்வி கற்க முடியாத நிலையில் உள்ள குழந்தைகளுக்கு, கலை மற்றும் புதுமையான கற்பித்தல் முறைகள் மூலம் கல்வியை கொண்டு சேர்த்ததே இவரின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இவரது 'மிஸ்கான்' (Miskaan) திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான சேரிப் பகுதி குழந்தைகள் பள்ளிக் கல்வியை இடைநிறுத்தம் செய்யாமல் தொடர வழிவகை செய்துள்ளார்.
கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு வழங்கப்படும் இந்த சர்வதேச அங்கீகாரம், இந்திய ஆசிரியர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கெளரவமாகப் பார்க்கப்படுகிறது. ரூபிள் நாகியின் இந்த வெற்றி, இந்தியாவில் பெண் கல்வி மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
0 Comments