"தைலாபுரத்தை திமுக டேக் ஓவர் செய்துள்ளது. திமுகவில் இருப்பவர்கள் எதிரிகள்; அய்யாவை சுற்றி இருப்பவர்கள் துரோகிகள்."
– அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு.
சென்னை அடுத்த மாமல்லபுரத்திலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாமகவின் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மாநகராட்சி பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அன்புமணி தலைமையில் நடைபெற்றது. இதில் அன்புமணி ராமதாஸ் பேசியது:
"திமுக சூழ்ச்சி செய்து வன்னியர்களையும் பட்டியலின மக்களையும் ஒன்று சேர விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். கேடுகெட்ட திமுக இரண்டு சமுதாயங்களுக்கு இடையில் சூழ்ச்சி செய்து வருகிறார்கள். இது அனைவருக்கும் தெரியும்.
சில திமுக கைக்கூலிகள், துரோகிகள் தற்போது அய்யாவை சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்த துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்கப் போவது கிடையாது.
நானும் "இது கடந்து போகும், இது கடந்து போகும்" என்று எவ்வளவு தான் தாங்கிக்கொண்டு செல்வது. எவ்வளவு அசிங்கப்பட்டுள்ளேன், அவமானப்பட்டுள்ளேன், தூக்கத்தைத் தொலைத்து அவதிப்பட்டு வருகிறேன் ஏன்? எதற்காக? உங்களுக்காகத்தான், இந்த கட்சிக்காக தான், இந்த சமுதாயத்திற்காக தான்.
இந்த துரோகிகள் எல்லாம் சேர்ந்து அய்யாவை என்ன மாதிரியான மனநிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்?
இன்னும் மூன்று மாதத்தில் யார் யார் சிறைக்கு செல்லப் போகிறார்கள் என பார்த்துக்கொண்டிருங்கள்.
என்னை தலைவராக்கிய அடுத்த நாளிலிருந்து ஜிகே மணி சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டார். சூழ்ச்சி செய்து அப்பா–பிள்ளை உறவைப் பிரித்தது ஜிகே மணி தான்.
ஜிகே மணி போன்றோர் மனிதர்களாக இருக்கவே தகுதி இல்லாத நபர்கள். அய்யாவிடம் “உங்களை அப்படி சொல்லிவிட்டார், இப்படி செய்துவிட்டார்” என்று என்னைப் பற்றி தவறான விஷயங்களை சொல்லி, அய்யாவுக்கும் எனக்கும் பகையை உருவாக்கியது ஜிகே மணி தான்.
குழந்தை மாதிரி உள்ள அய்யாவை ஜிகே மணி உள்ளிட்டோர் ஏமாற்றி வருகிறார்கள். டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பு தோற்றுவிட்டது, ஆனால் வெற்றி பெற்றதாக அய்யாவிடம் தவறான தகவல்களை சொல்லி ஏமாற்றி வருகிறார்கள்.
இவர்களுடைய செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு பின்னால் இருப்பது திமுக தான். திமுகவின் கைக்கூலிகள் தான் இவர்கள்.
இவர்களெல்லாம் யார் யாரிடம் எவ்வளவு (பணம்) வாங்கி இருக்கிறார்கள் என்ற விவரங்களும் என்னிடம் இருக்கிறது. ஊடகங்களில் தினசரி பொய்யைச் சொல்லி திசைதிருப்பி வருகிறார்கள்.
அருள், ஜி.கே. மணி போன்றோர் செய்யும் பொய்களை பாமகவினர் நம்ப வேண்டாம். அவர்களுக்கு பதில் சொல்லும் பெயரில் நீங்கள் பதிவுகளை போடாதீர். உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னமும் கட்சியும் நம்மிடம் தான் உள்ளது. திமுகவில் இருப்பவர்கள் எதிரிகள், ஆனால் அய்யாவை சுற்றி இருப்பவர்கள் துரோகிகள்.
அந்த தரப்பினரால் இப்படி ஒரு கூட்டம் போட முடியுமா? நிர்வாகிகள் இருக்கிறார்களா?
வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் ஜிகே மணி பெரிய துரோகம் செய்து இருக்கிறார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்து ஆறு மாதங்கள், ஒரு வருடங்கள் கடந்துவிட்ட பிறகு நான் அய்யாவிடம் சொன்னேன்: “போராடலாம், களத்திற்கு செல்லலாம், நாம் யார் என்று காட்ட வேண்டும்” என்று. ஆனால் ஜி.கே. மணி உடனடியாக அய்யாவிடம் சென்று “திமுக இடஒதுக்கீடு கொடுப்பதாக” சொல்லிவிட்டார்கள். நாம் போராட்டம் செய்ய வேண்டாம் என அய்யாவின் போராட்டத்தன்மையை ஜிகே மணி குறைத்து விட்டார்.
இது சாதாரண துரோகம் கிடையாது. ஜி.கே. மணி இந்த சமுதாயத்திற்கு செய்கின்ற துரோகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரிய போராட்டத்தை செய்திருந்தால் திமுக வேறு வழி இல்லாமல் இன்றைக்கு இடஒதுக்கீட்டை கொடுத்திருப்பார்கள்.
பாமகவை கைப்பற்ற நாம் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்தது அவர்கள்தான். சட்டரீதியாகவும் கட்சி விதிகளின்படியும் பாமக எங்களிடம் தான் உள்ளது.
அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்திற்கு சென்றால் வழக்கு ஏழு வருடங்கள் வரை நடக்கும். எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளது.
நாம் எந்த தவறும் செய்யவில்லை. அவர்கள் தான் தவறு செய்திருக்கிறார்கள். அதை இங்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.
நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். களத்தில் இறங்கி பாடுபடுங்கள்.
0 Comments