தமிழ்நாட்டில் காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ். உங்கள் நிலத்தை குத்தகைக்கு கொடுத்து 30 ஆண்டுகள் வரை வருமானம் பெற முடியும்.
அதற்கான இணையதளத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. அதாவது, பயன்பாடற்ற நில உரிமையாளர்கள்/ விவசாயிகள் பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு தேவையான நிலங்களை குத்தகைக்கு கொடுக்கலாம். இதற்கான புதிய இணையதளமாக "தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நில இணையதளம் nelp.tngecl.org, Tamil Nadu Renewable Energy Land Portal - ஐ மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் உத்தரவு
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் உற்பத்தியில் நான்காவது இடத்தில் உள்ள தமிழ்நாடு. 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் மொத்த ஆற்றல் பயன்பாட்டில் 50சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறும் தெளிவான கொள்கை மற்றும் தொலை நோக்கு இலக்கை கொண்டுள்ளது.
மேற்கண்ட இலக்கினை அடைய, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏற்ற நிலம் கிடைப்பது முக்கியமான அடிப்படை தேவையாகும். இதனை எளிதாக்கும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பயிரிட இயலாத அல்லது பயன்படுத்தப்படாத நிலங்களை உடைய விவசாய பெருமக்களுக்கு 30 ஆண்டுகள் வரை நீடித்த மற்றும் நிலையான வருமானம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்னும் உயரிய நோக்கில், நில உரிமையாளர்களையும் புதுப்பிக்கப்பட்ட பசுமை ஆற்றல் உற்பத்தி முனைவோர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் பசுமை மின் உற்பத்தியினை அதிகரிக்கும் வகையில் ஒரு ஒற்றைச் சாளர இணையதளத்தினை (Single Window Portal)உருவாக்குமாறு உத்தரவிட்டார்.
தமிழ்நாடு அரசின் புதிய வெப்சைட்
முதலமைச்சர் ஆணைக்கிணங்க, பல்வேறு பங்குதாரர்கள், விவசாய பெருமக்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்ட மேம்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரே தளத்தில் இணைக்கும் வகையில், "தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நில இணையதளம்" (httpe://relp.tngecl.org)(Tamll Nadu Renewable Energy Land Portal) உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்காக நிலங்களை குத்தகைக்கு வழங்க விரும்பும் விவசாயிகள் / நில உரிமையாளர்கள் மற்றும் ஆற்றல் திட்ட மேம்பாட்டாளர்கள் ஆகியோரை ஒரே தளத்தில் இணைக்கும் ஒற்றை சாளர வசதிதளமாகும். அரசு, தனியார் துறை மற்றும் தனிநபர் பங்குதாரர்களின் கூட்டு முயற்சிகளின் மூலம், மாநிலத்தின் பசுமை ஆற்றல் திறனை முழுமையாக பயன்படுத்தி, நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுக்கவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்
விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களிடமிருந்து நிலங்களை குத்தகைக்கு பெற்று, உரிய குத்தகை வாடகை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், பயிரிட முடியாத நிலங்களுக்கு 30 ஆண்டுகள் வரை குத்தகை முறையில் நிலையான வருமானம் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு கிடைப்பதுடன், அரசின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொள்முதல் (RPO) இலக்குகளை அடையவும் உதவுகிறது. அதே நேரத்தில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு ஏற்ற நிலங்களை எளிதாக அடையாளம் கண்டு தேர்வு செய்யும் வசதியை திட்ட மேம்பாட்டாளர்களுக்கு வழங்குகிறது.
இந்த போர்டல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்காக தங்கள் நிலங்களை குத்தகைக்கு வழங்க விரும்பும் நில உரிமையாளர்கள் மற்றும் நிலம் தேவைப்படும் சோலார் மின் உற்பத்தி முதலீட்டாளர்களுக்குமான ஒருங்கிணைப்பு தளமாக செயல்படும். இதில் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் தங்கள் நில விவரங்களை பதிவு செய்யலாம்; அதே நேரத்தில், திட்ட முதலுட்டாளர்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப நிலங்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யலாம்.
மின் கட்டணம் குறையும்
மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை முழுமையாக பயன்படுத்தும் சாதகமான சூழலை உருவாக்குவதே இந்த போர்டலின் முதன்மை நோக்கமாகும். இந்த புதிய முயற்சி, தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள பசுமை ஆற்றல் மாற்றப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும். இந்த புதிய முயற்சி, பொது மக்களுக்கு சுத்தமான, மலிவான மின்சாரத்தை எளிதாக கிடைக்கச் செய்வதுடன், மின் கட்டணமும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து தமிழ்நாட்டின் பசுமை ஆற்றல் இலக்கை அடைய பெரிதும் உதவும்.
0 Comments