சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முடியரசன் சாலை பகுதியில் அமைந்துள்ள இலுப்பக்குடி சுயம்பிரகாசேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்து விற்பனை செய்ய முயற்சி செய்யப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு காரைக்குடி நகரின் பல பகுதிகளில் மதிப்புமிக்க நிலங்கள் உள்ளன. இந்நிலையில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றபோது, அந்த நிலம் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் ஊர் மக்கள் அங்கு திரண்டனர்.
விசாரணையில், அதிகாரிகள் சிலரின் துணையுடன் போலி ஆவணங்களை பயன்படுத்தி நிலத்தை பதிவு செய்ய முயற்சி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.50 கோடி என கூறப்படுகிறது. மேலும், அந்த நிலத்துக்கு பட்டா மாற்றம் செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, கிராம மக்கள் தாலுகா அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கோவில் நிலம் தொடர்பாக உரிமை கோரிக்கை இருப்பதால், நீதிமன்ற உத்தரவைப் பெற்று மட்டுமே எந்தப் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என்று நிலத்தை வாங்கியதாக கூறப்படும் தரப்பினருக்கு போலீசார் அறிவுறுத்தினர். இதனால் காவல் நிலையத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
0 Comments